சீனாவில் 250க்கு மேற்பட்டோரைக் காவு வாங்கியிருக்கும் கொரோனா கிருமித் தொற்றால் செல்லப்பிராணிகளும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் சீனாவில் அதன் உரிமையாளர்களை உலுக்குகிறது.
சீனாவில் நாய்களுக்காக வடிவமைக்கப்பட்ட முகக்கவசங்கள் விற்கப்பட, அதை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. பொதுவாக விலங்குநல மருத்துவமனைகளில் விற்கப்படும் இந்தக் கவசங்களின் விலை தற்போது பத்து மடங்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் அவற்றை வாங்க நாய்களின் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இந்த கிருமித் தொற்றால் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000ஐத் தொடவுள்ள நிலையில், உலகின் பல நாடுகளிலும் இந்தக் கிருமித் தொற்று பரவலைத் தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூர், இலங்கை. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் கொரியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரனா கிருமித்தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் 200க்கு மேற்க்பட்டோர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் தங்கள் செல்லப்பிராணிகளான நாய்களுக்கு கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக சீனர்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர்.
நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகளிடம் இதுவரை வைரஸ் தாக்குதல் கண்டறியப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது சீனாவில் உள்ள செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.
#தமிழ்முரசு #வூஹான் #செல்லப்பிராணிமுகக்கவசம்