இந்தோனேசியாவின் மத்திய சுலாவேசி பகுதியில் உள்ள பாலு ஆற்றில் வாழும் சுமார் 4 மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்றின் கழுத்தில் ரப்பர் வளையம் (டயர்) ஒன்று சிக்கியுள்ளது.
அதனை வெற்றிகரமாக அகற்றுபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று மத்திய சுலாவேசியின் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், சன்மானம் என்ன என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவில்லை.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கழுத்தில் டயர் சிக்கியபடி அந்த முதலை சுற்றி வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் இருந்தும் இந்த முதலை உயிர்தப்பியது; ஆனால், கழுத்தில் சுற்றிய டயரிடமிருந்து அதனால் தப்ப இயலவில்லை.
இந்த டயர் கழுத்தில் சிக்கியபோது குட்டியாக இருந்த முதலை, 4 ஆண்டுகளில் வளர்ந்து பருத்துள்ளது. எனவே, அந்த டயர் முதலையின் கழுத்தை இறுக்கிக் கொண்டே வருகிறது.
இதனால், சிரமங்களை எதிர்கொள்ளும் அந்த முதலை மெல்ல, மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது.
எனவே, இந்த முதலையைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதலையின் கழுத்தில் இருக்கும் டயரை அகற்ற 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
முகமது பஞ்சி எனும் விலங்கு நல ஆர்வலர் அதன் கழுத்திலிருந்து டயரை அகற்ற முயற்சி செய்தார்; முடியவில்லை.
அதேபோல, முதலைக்கு உணவு கொடுத்து அதனைப் பிடிக்க இயற்கை வளங்கள் பாதுகாப்பு அலுவலகம் மேற்கொண்ட முயற்சியும் பலிக்கவில்லை!
#முதலை #இந்தோனீசியா #தமிழ்முரசு

