ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த 47 ஆண்டுகாலமாக அங்கம் வகித்த பிரிட்டன் நீண்ட இழுபறிக்குப் பின் இன்று (பிப்ரவரி 1) அதிகாரபூர்வமாக வெளியேறியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு உள்ளூர் நேரப்படி 23.00 ஜிஎம்டி நேரத்தில் (சிங்கப்பூர் நேரம் சனிக்கிழமை காலை 7.00) நிகழ்ந்தது.
இதையடுத்து நாடாளுமன்றம் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான ‘பிரக்சிட்’ ஆதரவாளர்கள் நாட்டின் கொடியை அசைத்து ஆடிப் பாடிக் கொண்டாடினர்.
“இன்று ஓர் அருமையான நாள்,” என்று லண்டனில் வசிக்கும் 53 வயது டோனி வில்லியம்ஸ் என்பவர் சொன்னார்.
“இனி எங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை, எங்கள் எண்ணம் ஈடேறிவிட்டது,” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் அவர்.
ஒரு காலத்தில் ‘பிரக்சிட்’ நிறைவேறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்துள்ளது.
கடந்த 2016ல் ஒன்றியத்திலிருந்து வெளியேற பொது வாக்கெடுப்பு மூலம் பிரிட்டிஷ் மக்கள் முடிவு செய்தனர்.
ஆனால் ‘பிரக்சிட்’டுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டதால் இரண்டு பிரதமர்கள் சமாளிக்க முடியாமல் பதவி விலகினர்.
பின்னர் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சனும் ‘பிரக்சிட்டை’ நிறைவேற்ற முயற்சி செய்தார்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டை போட்டனர். இதனால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அவர் தேர்தலில் குதித்தார்.
இதில் அமோகமாக வெற்றி பெற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன், உடனடியாக ‘பிரக்சிட்’ உடன்பாட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார்.
மற்றொரு நிலவரத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றமும் பிரக்சிட்டுக்கு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து ‘பிரக்சிட்’ உறுதியானது.
#பிரக்சிட் #தமிழ்முரசு #பிரிட்டன்வெளியேறியது