சீனாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,000ஐ தாண்டியுள்ள நிலையில், அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636ஆக உயர்ந்துள்ளது என இன்று (பிப்ரவரி 7) தெரிவிக்கப்பட்டது.
புதிதாக அறிவிக்கப்பட்ட 73 மரணங்களில் 69 ஹுபெய் மாகாணத்தில் என்றும் அதில் 64, வூஹானில் நிகழ்ந்ததாகவும் செய்தி குறிப்பிட்டது.
புதிதாக கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 3,143 பேரையும் சேர்த்து, சீனாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,161ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 4,800க்கும் அதிகமானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 2,447 புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் அதனையடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,112 ஆகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று வரை 1540 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
#தமிழ்முரசு #கொரோனா #சீனா