சீனாவின் கொரோனா கிருமி குறித்து முதன்முதலில் இணையத்தில் தகவல் பகிர்ந்து கொண்டு எச்சரித்தவர்களில் 34 வயதான டாக்டர் லி வென்லியாங்கும் ஒருவர். அதே கிருமிக்கு அவர் இன்று காலை பலியாகினார்.
கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் தேதியன்று டாக்டர் லி வெளியிட்ட செய்தி தொடர்பில் அவர் வதந்திகளைப் பரப்பி நாட்டின் ஒழுங்கைச் சீர்குலைப்பதாகக் கூறி போலிசார் அவரைக் கண்டித்தனர்.
அவர் பணிபுரியும் மருத்துவமனை அவரைத் தண்டிக்கும் என்ற கவலையில் இருந்தார் டாக்டர் லி. ஆனால் நீதிமன்றமே அவருக்கு ஆதரவாக போலிசாரை வெளிப்படையாக விமர்சித்தனர்.
டாக்டர் லி உட்பட மேலும் எழுவர் கிருமி தொடர்பில் செய்தி வெளியிட்டது முற்றிலும் பொய் அல்ல என்று நீதிமன்றம் சுட்டியது.
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் லி, தமக்கும் கிருமித் தொற்றி இருப்பதாக கடந்த சனிக்கிழமை அன்று தம் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
இருப்பினும் குணமடைந்து மீண்டும் வேலைக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகவும் அதில் கூறியிருந்தார்.
இதற்கிடையே புதன்கிழமைக்குள் அவரின் உடல்நிலை மோசமாகியது. அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
அவரை 'நாயகன்' என்று குறிப்பிட்டு சீனாவில் பலர் சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
அவரது மரணம் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
#Dr Li Wenliang #Wuhan #தமிழ்முரசு