வூஹானில் மருத்துவப் பணியாளர்கள் தங்க 7 சொகுசுக் கப்பல்கள்

வூஹானில் மருத்துவப் பணியாளர்கள் தங்க 7 சொகுசுக் கப்பல்கள்

1 mins read
3c4b0f5f-cff8-490b-a405-5e2cb184d65e
வூஹானில் மருத்துவப் பணியாளர்களைத் தங்க வைப்பதற்காக சீனா ஏழு சொகுசுக் கப்பல்களை ஏற்பாடு செய்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

வூஹானில் மருத்துவப் பணியாளர்களைத் தங்க வைப்பதற்காக சீனா ஏழு சொகுசுக் கப்பல்களை ஏற்பாடு செய்திருப்பதாக இன்று (பிப்ரவரி 22) சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

அத்தகைய முதல் கப்பல் யிச்சாங்கிலிருந்து வூஹானுக்கு நேற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஏழு கப்பல்களிலும் மொத்தம் 1,469 படுக்கைகள் இருக்கும்.

ஹுபெய் மாகாணம், அதன் தலைநகரம் வூஹான் ஆகியவற்றில் கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு உதவும் விதத்தில் சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 11ஆம் தேதி நிலவரப்படி 1,716 சுகாதாரப் பணியாளர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் அதில் பலர் உயிரிழந்துவிட்டதாகவும் மூத்த சீன சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சொகுசுக் கப்பல்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான உணவருந்தும், வாழும் நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை உற்சாகத்துடன் வைத்திருக்கும் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.

#ஹுபெய் #சீனா #வூஹான் #தமிழ்முரசு #கொரோனா

குறிப்புச் சொற்கள்