சிங்கப்பூரில் கொரோனா கிருமி பரவும் ஐந்தாவது வட்டாரம் கண்டறியப்பட்டு உள்ளது.
எண் 10 சைன்ஸ் பார்க் ரோட்டில் அமைந்துள்ள 'விஸ்லேர்ன் டெக்னாலஜிஸ்' என்னும் இணையக்கற்றல் நிறுவனத்தோடு தொடர்புடைய மேலும் இருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (பிப்ரவரி 28) தெரிவித்தது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 44 வயது பெண், 28 வயது ஆண் ஆகிய இவ்விருவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.
அண்மையில் இவர்கள் சீனாவுக்கோ தென்கொரியாவின் டேகு, சியோங்டோ நகரங்களுக்கோ பயணம் செய்யவில்லை என்றது அமைச்சு.
கிருமித்தொற்று கண்ட 93வது, 95வது நபர்களும் இதே நிறுவனத்தின் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுவா சூ காங் நார்த் 5ல் வசித்து வந்த 44 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையில் நடைபெற்ற வர்த்தகக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். கிருமித்தொற்று கண்ட 93வது நபருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
இம்மாதம் 20ஆம் தேதி மருத்துவ சிகிச்சை நாடிய அவரை கிருமி தொற்றியது நேற்று உறுதி செய்யப்பட்டது.
24 வயது ஆடவரின் கிருமித்தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படுகிறது.
புதிதாக பாதிக்கப்பட்ட இருவரையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98க்கு அதிகரித்து உள்ளது.
கிருமித்தொற்றிலிருந்து குண மடைந்து நேற்று மூவர் வீடு திரும்பினர்.
இதனையடுத்து, முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 69 ஆனது.
#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர் #தமிழ்முரசு

