உலகின் பல நாடுகளுக்கு கொரோனா கிருமி வேகமாகப் பரவிவரும் வேளையில், சீனாவில் தொடங்கிய கிருமித்தொற்று சம்பவங்கள் மெதுவடைந்து வருவதாகத் தெரிகிறது.
அதேவேளையில், அந்நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர்.
எனினும், அந்நாட்டில் அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்கள், முழு நிலவரத்தையும் வெளிப்படையாகக் காட்டுகின்றனவா என்பது சந்தேகத்திற்குரியது என்று கூறப்படுகிறது.
சீனாவில் புதிதாக 143 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டது. நேற்று (மார்ச் 5) பதிவாகியிருந்த 139 உடன் ஒப்புநோக்க, அது சற்று அதிகம்.
இன்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களில் 126, வூஹானில் பதிவானவை. வூஹான் தவிர, ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கிருமி தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது.
ஹுபெய் மாகாணத்துக்கு வெளியே, சீனாவில் 17 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அவற்றில் 16 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்குள் வந்தவர்கள் தொடர்பிலானது.
அவர்களில் 11 பேர் கான்சுவிலும் நால்வர் பெய்ஜிங்கிலும் ஒருவர் ஷங்ஹாயிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
ஈரானிலிருந்து காங்சுவுக்கு விமானம் மூலம் வந்த 311 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 11 பேருக்கு கிருமித்தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
பெய்ஜிங்கில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நால்வர் இத்தாலியிலிருந்து வந்தவர்கள்.
ஷங்ஹாயில் கிருமித்தொற்று கண்டவரும் ஈரானிலிருந்து வந்தவர் என்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைப் பற்றிய தகவல் சேகரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய நிலவரப்படி சீனாவில் 3,042 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டது.
#சீனா #கொரோனா #கொவிட்-19

