கொரோனா கிருமித்தொற்றைச் சமாளிக்க உதவும் வகையில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற 65,000 மருத்துவர்களும் தாதியரும் மீண்டும் தேசிய சுகாதாரச் சேவைகளுக்குத் திரும்புமாறு பிரிட்டன் அரசாங்கம் அவர்களுக்குக் கடிதம் அனுப்பி வருகிறது.
முதல்நிலை சேவைகளுக்கு ஊக்கம் அளிக்க முன்னாள் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர் என்று உயரதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுடன், இறுதி ஆண்டில் பயிலும் மருத்துவ, தாதிமைக் கல்வி மாணவர்களும் தற்காலிகமாகப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்த நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவ வசதிகள் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கிருமித்தொற்றால் பிரிட்டனில் இதுவரை கிட்டத்தட்ட 3,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 144 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கொரோனா கிருமி நாட்டின் பொருளியலையும் பாதித்து வருகிறது. பல நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன; ஆயிரக்கணக்கான வேலைகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நிறுவனங்களுக்கு ஆதரவளித்து, வேலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் விரைவில் ஊதிய மானிய தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.
இதனிடையே, பிரிட்டனில் ரயில் சேவைகள் பாதியாகக் குறைக்கப்பட உள்ளன. பெரும்பாலான விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது சேவைகளைக் குறைத்துக்கொண்டதை அடுத்து, லண்டன் ஹீத்ரோ விமான நிலையமும் தனது செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ள இருக்கிறது.
கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக பிரிட்டன் மக்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.