சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்த முதல் சிங்கப்பூரரான 75 வயது மூதாட்டியின் உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) மாலை மண்டாய் தகனச்சாலையில் தகனம் செய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக இதயப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சனிக்கிழமை காலமானார். கடந்த மாதம் 23ஆம் தேதி அவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிப்புக்கு உள்ளான 90வது நபரான அவர் தி லைஃப் சர்ச் ஆஃப் மிஷன்ஸ் சிங்கப்பூர் கிருமித்தொற்று வட்டாரத்துடன் தொடர்புடையவர்.
இங்கு கிருமித்தொற்றால் உயிரிழந்த இரண்டாவது நபர் 64 வயதான இந்தோனீசியர். அவர் இம்மாதம் 13ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிப்புக்கு உள்ளான 212வது நபரான அவருக்கு ஏற்கெனவே நிமோனியா, இதய நோய் போன்றவை இருந்தன.
லோய் கோக் எங் என்று அறியப்படும் அவருக்கு மண்டாய் தகனச்சாலையில் நினைவுகூர்தல் சேவைக்குப் பிறகு அவரது உடல் எரியூட்டப்பட்டதாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. அந்த நிகழ்வில் குடும்பத்தார், நண்பர்கள் என சுமார் 40 பேர் கலந்துகொண்டனர்.
சவப்பெட்டியை இறுதிச்சடங்கு நிறுவனம் ஒன்றின் இரு ஊழியர்கள் கையாண்டனர். அவர்கள் தனிநபர் பாதுகாப்புக் கவசத்தை அணிந்திருந்தனர். கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழப்போரைக் கையாளுவதற்கான விதிமுறைகள் ஏற்கெனவே இறுதிச்சடங்கு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விதிமுறைகளுக்கு உட்பட்டு இரு உடல்களும் தகனச்சாலையில் எரியூட்டப்பட்டன.
#சிங்கப்பூர் #கொவிட்-19 #உயிரிழப்பு


