சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் நடப்பில் இருந்த அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படுவதாக சுகாதார ஆணையம் இன்று (மார்ச் 24) தெரிவித்தது. இருப்பினும் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் பகுதிக்குரிய பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 8ஆம் தேதியன்றுதான் நீக்கப்படும்.
மக்கள் ஒரு சுகாதாரக் குறியீட்டின் அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டு வூஹான் நகரை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர் என்று ஆணையம் தெரிவித்தது.
சீனாவிலிருந்து வெளியாகும் அதிகாரபூர்வ தகவல்கள், அங்கு உள்ளூர் கிருமிப் பரவல் இல்லை, மிகக் குறைவு என்று கூறினாலும், வூஹானில் தினமும் பத்துக்கு மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக அங்குள்ள தொற்று நோய் தடுப்பு, கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிலும், அத்தகைய புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை என்றாலும் பரிசோதித்ததில் அவர்களுக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், பாதிப்பு ஏற்படக்கூடிய அபாய நிலையில் இருந்த ஊழியர்கள் ஆகியோர் இந்தப் பிரிவில் இருப்பதாகக் கூறப்பட்டது.
எனவே, வூஹானில் தற்போதைக்கு கிருமிப் பரவல் முற்றிலுமாக நின்றுவிட்டதாகக் கூறமுடியாது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உறுப்பினர் தெரிவித்தார்.
ஜனவரி 23ஆம் தேதி முதல் அப்பகுதியும் சுற்றியுள்ள பகுதிகளும் முடங்கின.
கிருமித்தொற்று கட்டுக் கடங்காமல் பரவுவதைத் தடுக்க ஹுபெய் மாகாணத்தின் 60 மில்லியன் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
ஹுபெய் மாகாணத்திற்குள் செல்வதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் இன்றுடன் ஒரு முடிவுக்கு வருகின்றன.
இம்மாதம் 19ஆம் தேதியன்று புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஒன்றுகூட இல்லை என ஹுபெய் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து இப்பயணக் கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டுள்ளன.
இத்துடன் சீனாவில் 80,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,200க்கு மேல் உயிரிழந்துவிட்டனர்.
இதற்கிடையே, சீனாவில் கிருமித்தொற்று பரவலை அந்நாட்டு அரசாங்கம் ஒழித்துள்ளதாக சீன அதிபர் ஸி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான தடைக்காப்பு ஆணை விதிகளை பெய்ஜிங் மேலும் கடுமையாக்குவதாக ‘பெய்ஜிங் டெய்லி’ கூறியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து பெய்ஜிங் நகருக்கு வருவோர் தடைக்காப்பு ஆணைக்கு ஆளாவதுடன் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.
கிருமித்தொற்று பாதிப்புடன் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளால் சீனாவில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இரட்டிப்பானதை அடுத்து பெய்ஜிங் இவ்வாறு விதிகளைக் கடுமையாக்கியுள்ளது.
திங்கட்கிழமை அன்று உறுதி செய்யப்பட்ட 78 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 74 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால் ஏற்பட்டவை.
#பெய்ஜிங் #சீனா #ஹுபெய் #வூஹான் #கொரோனா #கொவிட்-19