சிங்கப்பூரில் உயிரிழந்த 3வது நபர் பற்றி மருத்துவர்: நோய்க்கு எதிரான அவரது 'அசாதாரண போரட்ட உணர்வை' மறக்க இயலாது

சிங்கப்பூரில் உயிரிழந்த 3வது நபர் பற்றி மருத்துவர்: நோய்க்கு எதிரான அவரது 'அசாதாரண போரட்ட உணர்வை' மறக்க இயலாது

3 mins read
3d70185d-6721-4675-b8cc-0be3a77da1cb
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது திரு சுங் ஆ லேக்கு சிகிச்சை அளித்து பராமரித்த மருத்துவக் குழு. அவரது உடல் நிலை பற்றி குடும்பத்தாருக்கு அடிக்கடி தகவல்களை அளித்து வந்தார் டாக்டர் யுவோன் சியா (முதல் வரிசையில் வலமிருந்து ஐந்தாவது). படம்: சிங்கப்பூர் பொது மருத்துவமனை -

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் உயிரிழந்த மூன்றாவது நபரான 70 வயது சுங் ஆ லே, கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட இம்மாதம் இரண்டாம் தேதி முதல் 27 நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

மூன்று குழந்தைகளுக்குத் தந்தையும் ஐந்து பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவுமான அவர், தொற்றால் ஏற்பட்ட சிக்கல்களால் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) உயிரிழந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்த காலகட்டத்தில் அவரது குடும்பத்தாருக்கு மணிக்கொருதரம் அவரது உடல் நிலை பற்றிய தகவல் அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சுவாசம் மற்றும் தீவிர பராமரிப்பு மருத்துவப் பிரிவின் மருத்துவ அதிகாரியான டாக்டர் யுவோன் சியா அந்தத் தகவல்களை வழங்கினார்.

பணிக்குட்பட்ட அலுவல்களுக்கும் மேல் செயல்பட்ட டாக்டர் சியாவை திரு சுங்கின் குடும்பத்தார், "ஓர் உண்மையான நாயகன் (a real hero)," என்று குறிப்பிட்டனர்.

திரு சுங்குக்கு சிகிச்சை அளித்ததன் தொடர்பிலான தமது அனுபவங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டார் டாக்டர் சியா.

தொடர்ந்து 27 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த திரு சுங், சுகாதாரப் பராமரிப்புக் குழு, திரு சுங்கின் குடும்பத்தார் என அனைவருக்கும் சிரமமான பயணமாக அது இருந்தது என்று குறிப்பிட்ட டாக்டர் சியா, மூத்த மருத்துவர்கள் அளித்த ஆதரவு போற்றுதலுக்குரியது என்றார்.

கொவிட்-19க்கு செய்யக்கூடிய சிறந்த மருத்துவம் பற்றி ஓரளவே உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உகந்த மருந்தை அளிப்பதில் எங்கள் குழு மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டது என்று குறிப்பிட்ட அவர், அவரது உடல் நலம் தேறி வந்த சமயங்களில் எங்களது நம்பிக்கை அதிகரித்தது என்றார்.

கிருமித்தொற்றால் ஏற்பட்ட சிக்கலிலிருந்து மீள முடியாமல் அவரது உடல் நிலை கவலைக்கிடமானபோது மிகுந்த வருத்தமடைந்தேன் என்றார் மருத்துவர் சியா.

இந்தப் பயணத்தை நான் மருத்துவராக இருக்கும் காலம் வரை நினைவில் வைத்திருப்பேன்; இந்த அனுபவம் என்னை மேலும் மெருகேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரு சுங்கின் குடும்பத்தாருக்கு மணிக்கொரு தரம் தகவல் அளித்தது பற்றிக் குறிப்பிடுகையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நோயாளிகளின் நிலவரம் பற்றி தினமும் தகவல்களை அளிப்பது வழக்கம் என்று குறிப்பிட்ட மருத்துவர் சியா, நோயாளியின் உடல் நிலையில் மாற்றம் தெரியும்போதும் தகவல் அளிப்போம் என்றார்.

திரு சுங் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தார் அவரைப் பார்க்க இயலாத நிலை இருந்தது. அதனால் அவர்களது குடும்பத்தாருக்கு அடிக்கடி தகவல் அளிப்பது முக்கியம் எனக் கருதியதாகத் தெரிவித்தார் மருத்துவர் சியா.

திரு சுங்கின் உடல் நிலையில் ஒவ்வொரு முறை மாற்றம் ஏற்பட்டபோதும் அது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளித்ததுடன் தெளிவான விளக்கங்களும் அளித்ததாகக் குறிப்பிட்ட மருத்துவர் சியா, அவருக்கு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிகிச்சை பற்றியும் விளக்கியதாகச் சொன்னார்.

சிகிச்சை பலனின்றி திரு சுங் உயிரிழந்தாலும், 27 நாட்களில் நோய்க்கு எதிரான போரில் திரு சுங் காட்டிய போராட்ட குணத்தை மருத்துவக்குழு எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று கூறிய அவர், திரு சுங்கின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

#சிங்கப்பூர் #கொவிட்-19 #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்