கிருமித் தொற்றால் உயிரிழக்கும் அபாயம் மற்றும் கடுமையாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு முதியவர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதினருக்கும் அதிகளவில் உள்ளதாக பிரிட்டனின் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
சீனாவில் பதிவான கிருமித் தொற்று சம்பவங்கள் பற்றிய புதிய விரிவான ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட 3,600க்கும் மேற்பட்ட சம்பவங்களையும் வூஹானில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான பயணிகளிடம் இருந்து திரட்டப்பட்ட தகவல்களையும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களிடையே வயது முக்கிய காரணியாக இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 18 விழுக்காட்டினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர்களை அடுத்து, 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே அது 8.2 விழுக்காடாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நாற்பதுகளில் உள்ளவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 4 விழுக்காடாக உள்ளது.
20 வயதுக்கும் குறைந்தவர்களில் 0.04 விழுக்காட்டினரே கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தி லன்செட் தொற்று நோய் இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியானது.
“உறுதி செய்யப்படாத சம்பவங்கள் இருக்கலாம், ஆனால் எங்கள் பகுப்பாய்வு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 50 வயதிற்கு குறைந்தவர்களைவிட அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
“மேலும் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் அபாயகரமானதாக இருக்கக்கூடும்,” என்றார் துணை ஆய்வாளரான அஸ்ரா கனி.
#கொவிட்-19