சீனாவில் நேற்று (ஏப்ரல் 11) புதிதாக 99 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அளவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் அதிகம்.
இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைச் சோதிக்கும் நடைமுறைகளைத் தீவிரப்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா கிருமித்தொற்று சூழலில் முகக்கவசங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை சீனா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.
ஆனால் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் தரம் குறைந்தவை என்று ஐரோப்பாவில் புகார்கள் கிளப்பி உள்ளன. இந்த நிலையில், சீனா அவசியமான நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது.
இதன் விளைவாக ஏற்றுமதிகள் தாமதமடையும் நிலை ஏற்பட்டு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இதனிடையே, சீனாவின் குவாங்சூ நகரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஆப்பிரிக்கர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக சீனா மீது அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.

