கொரோனா கிருமியின் மரபணு மூலக்கூறு காற்றில் உள்ளதாக சீன விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா கிருமிப் பரவல் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரிலுள்ள இரு அரசு மருத்துவமனைகள் உட்பட 31 இடங்களில் காற்றில் உள்ள கிருமிகள் குறித்து கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விஞ்ஞானி கி லன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வறிக்கை, ‘நேச்சர் ரிசர்ச்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் சேகரித்த மாதிரிகளில் காற்றில் கிருமி உள்ளது உறுதி செய்யப்பட்டாலும் அவை தொற்றுநோயாகப் பரவக்கூடுமா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.
ஆனால் மூச்சுவிடுதல் மற்றும் பேசுவதன் மூலம் வெளியாகும் சிறிய நீர்த்துளிகள் காற்றில் சுமார் 2 மணி நேரத்துக்காவது இருக்கும்; அது மற்றவர்களால் சுவாசிக்கப்படக்கூடும் என்கிறது ஆய்வு.
“காற்றின்வழி பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக இது வலுவாக அறிவுறுத்துகிறது,” என்றார் வெர்ஜீனியா டெக் சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் லின்சி மார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்த மருத்துவமனைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காற்றோட்டமுள்ள நோயாளிகளின் அறைகளில், இந்த மூலக்கூறு அணுவின் அடர்த்தி மிகக் குறைவாகக் காணப்பட்டது.
அதேசமயம், கழிப்பறை போன்ற வெளிக்காற்று வசதியற்ற இடங்களில், அடர்த்தி அதிகமாக இருந்தது.
மருத்துவமனைக்குள்ளும் வெளியிலும் அதிகமானோர் நடமாடியதன் காரணமாக மூலக்கூறு அணு அதிகம் காணப்பட்டது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பாதுகாப்பு ஆடைகளை மாற்றும் அறைகளில் மூலக்கூறு அணுவின் அடர்த்தி அதிகமாகக் காணப்பட்டது.
கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை நடவடிக்கைகளுக்குப் பின், காற்றில் உள்ள கிருமியின் மூலக்கூறு அணு வெகுவாக குறைந்து இருந்தது.
குறிப்பாக, பொது இடங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில், கொரோனா மூலக்கூறு அணு குறைவாகவே இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.