தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதறாக கடந்த மார்ச் மாதம் துபாயிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார் திருமதி குசும் கெமானி, 51.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துலக விமானச் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் அவர் மீண்டும் துபாய்க்கு திரும்ப இயலாத சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே, குசுமின் கணவர் சுஷில் கெமானி, 59, கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டதால் துபாயில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
துபாயில் இருக்கும் தமது மூன்று மகள்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதாகக் கூறிய குசும், துபாய்க்குத் திரும்ப அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்திருப்பதாகக் கூறினார்.
டெக்ஸ்டைல் தொழில்துறையில் பணிபுரியும் சுஷில் கெமானிக்கு, கடந்த மாதம் 30ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நலம் மோசமடைந்ததால் இம்மாதம் 10ஆம் தேதி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவரது மூத்த மகள் ஷ்ருஷ்டி கெமானி கூறினார்.
இம்மாதம் 19ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து எங்களது தந்தையை நாங்கள் பார்க்க முடியவில்லை. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படுவதற்கு முன்பு சற்று நேரம் தொலைபேசி வழியாக உரையாடினார். எங்கள் அம்மா விரைவில் துபாய் திரும்ப அதிகாரிகள் உதவ வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்துள்ளனர் குசுமின் மகள்கள்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online