சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்த ஆக இளையவருக்கு வயது 41.
இங்கிருக்கும் தங்கும் விடுதி ஒன்றில் வசித்து வந்த வெளிநாட்டு ஊழியரான திரு வு லியூ, தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையோ, சிகிச்சை பெற்றதையோ சொந்த நாடான சீனாவில் இருக்கும் குடும்பத்தாரிடம் தெரிவிக்கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினமும் குடும்பத்தாருடன் காணொளி மூலம் உரையாடி வந்த அவர், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4) குடும்பத்தாருடன் தொடர்புகொள்ளவில்லை.
ஆனால், இங்கிருக்கும் அவரது முதலாளி தொடர்புகொண்டு, திரு வு உயிரிழந்த செய்தியைத் தெரிவித்தார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
கொவிட்-19 சிகிச்சை முடிந்து, இரு வாரங்களாக சொகுசுக் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த திரு வு, கடந்த வியாழக்கிழமை திடீரென மயங்கிச் சரிந்தார் என்று திரு வுவின் மூத்த மகன் ஃபெய்சியாங், 22 தொலைபேசி வழியான உரையாடலின்போது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
அவர் வசித்துவந்த விடுதியில் பலருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியுமென்றாலும் தம் தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது பற்றி வீட்டில் யாருக்கும் தெரியாது என்றார் திரு ஃபெய்சியாங்.
கடந்த புதன்கிழமை தந்தையுடன் இறுதியாக உரையாடியபோது அவர் சொகுசுக் கப்பலில் இருந்தார் எனவும் அப்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்ததுபோல் காணப்பட்டதாகவும் ஃபெய்சியாங் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்த திரு வு, ஓராண்டுக்கு அல்லது ஈராண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தாயகம் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
"சீனாவிலிருந்து நல்ல உடல்நலத்துடன் சென்ற என் தந்தையின் அஸ்தி மட்டுமே திரும்பி வரப்போகிறது," என்று குறிப்பிட்ட திரு ஃபெய்சியாங், தம் தந்தை இறந்த தகவல் கிடைத்தது முதல் தம் தாயார் உடைந்துபோயிருப்பதாகச் சொன்னார். திரு வுவின் இளைய மகனுக்கு 10.
தம் தந்தை உயிரிழந்தது பற்றி அவரது பெற்றோர்களுக்கு இன்னும் தெரிவிக்கவில்லை என்று கூறிய ஃபெய்சியாங், 70 வயதுக்கு மேற்பட்ட தம் தாத்தா, பாட்டி இருவரும் இந்தச் செய்தியை எப்படி தாங்கிக்கொள்வர் என்று தெரியவில்லை என்றார்.
உலோக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த திரு வு, குடும்பத்தில் வருமானம் ஈட்டிய முக்கிய நபர்; மாதந்தோறும் சுமார் $2,000 வீட்டுக்கு அனுப்பி வந்தார்.
மேற்கொண்டிருக்கும் திரு வுவின் மனைவிக்கு அண்மையில் அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
திரு வுவின் முதலாளி, வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஆகியன பொருளாதார ரீதியில் உதவி வரும் வேளையில், வேறு சில நல்லுள்ளங்களும் நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. கிருமித்தொற்றால் உயிரிழந்த 51 வயது சீன ஊழியரின் குடும்பத்துக்கும் உதவும் நோக்கில் இந்த நன்கொடைத் திரட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானச் சேவைகள் தொடங்கிய பிறகே தந்தையின் அஸ்தியைப் பெற முடியும் என்று குறிப்பிட்ட திரு ஃபெய்சியாங், தம் தந்தையை இறுதியாக வழியனுப்பி வைக்கக்கூட முடியவில்லை என்ற வருத்தத்தைத் தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

