கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிப்பதில் இரண்டாம் கட்டத்துக்குச் சென்றுள்ளது சீனா. இந்தத் தகவலை சீன மருத்துவ அறிவியல் கழகத்தின் உயிர் மருத்துவக் கழகம் (IMBCAMS) இந்தத் தகவலை இன்று தெரிவித்தது. அந்த மருந்தின் திறன், பாதுகாப்பு போன்ற அம்சங்கள் ஆராயப்படுவதாக அது தெரிவித்தது.
நேற்று இரண்டாம் கட்ட பரிசோதனையை IMBCAMS தொடங்கியது. சீனா பரிசோதித்து வரும் ஆறு தடுப்பு மருந்துகளில் இதுவும் ஒன்று. கடந்த மே மாதத்திலிருந்து 200 பேர் இந்த தடுப்பு மருந்து பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளதாக கழகம் அதன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டது.
ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மருந்து செலுத்த வேண்டும், அது நோயெதிர்ப்புத் திறனை பாதுகாப்பான முறையில் தூண்டிவிடுமா என்பது போன்ற அம்சங்கள் இந்த இரண்டாம் கட்டப் பரிசோதனையில் ஆராயப்படும்.
உலகம் புதிய, மிகவும் மோசமான நிலையை நோக்கிச் செல்வதாக கொரோனா தொற்றின் நிலவரம் பற்றி உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் பத்துக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகள் பல்வேறு பரிசோதனை நிலைகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், எந்த ஒரு மருந்தும் விற்பனைக்காகத் தயாரிக்கப்படுவதற்கான அனுமதியைப் பெறும் நிலையை எட்டவில்லை.
சீனா தனது இவ்வாண்டு கொரோனா தடுப்பு மருந்து தேவைகளுக்காக குறிப்பிட்ட ஒரு தாவரத்தைப் பயன்படுத்த இருப்பதாக IMBCAMS குறிப்பிட்டுள்ளது. அந்தத் தாவரம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
சீனாவில் தொடங்கிய கொரோனா கிருமித்தொற்று, உஅலக அளவில் சுமார் 8.81 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளாது; சுமார் 460,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online