கொவிட்-19 தொற்றுநோயினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பைத் தொடர்ந்து சிங்கப்பூரை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தி, வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான தனது பிரசார முழக்கத்தையும் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் சீர்திருத்தக் கட்சி (ஆர்பி) இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.
"நமது வாழ்நாளில் இதுவரையில் கண்டிராத உலகளாவிய பொருளியல், சுகாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில்", இந்தப் பொதுத் தேர்தலில் 'சிறப்பான, நியாயமான சிங்கப்பூரை மீண்டும் உருவாக்குவோம்' என்பதே தனது பிரசார முழக்கமாக அமையும் என்ற கட்சி வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது.
"தொடர்ந்து வளம்பெற்று வரும் சிங்கப்பூர் திறனுக்கு இது ஒரு முக்கியமான அச்சுறுத்தல். சிங்கப்பூர் ஏற்கனவே உலகளாவிய வர்த்தகத்தையும்; அரசாங்கத்தின் அளவுக்கதிகமான சேமிப்பு, நடப்புக் கணக்கில் உபரி, பெரிய அளவிலான வரவு செலவுத் திட்டம் என்ற அரசாங்கத்தின் பொருளியல் மாதிரியையும் அதிகமாக நம்பியுள்ளது," என்று அக்கட்சி தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரர்களின் வேலைகளையும் வாழ்வாதாரங்களை பாதுகாக்க அரசாங்கம் மிகப்பெரிய தொகையை செலவிடுவதைக் குறைகூறவில்லை. ஆனால் அது போதாது என்று அக்கட்சி கூறியது.
சிங்கப்பூர் ஒவ்வோர் ஆண்டும் அதன் சேமிப்பில் இருந்து இருந்து கூடுதலாக $60 பில்லியனைச் செலவழிக்க முடியும் என்ற அது, நாட்டின் சேமிப்பு குறைந்தபட்சம் $1.5 டிரில்லியன் என மதிப்பிடுகிறது. இந்தத் தொகை பற்றிய தகவலை அது எங்கிருந்து பெற்றது என்பதை அது குறிப்பிடவினல்லை.
இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பொருள் சேவை வரியை ரத்து செய்வது, உணவு, மருந்து, பொதுப் பயனீட்டு போன்ற முக்கியமானவற்றுக்கு இவ்வரியை நீக்குவது, 6 மாதம் வரை வேலையிழந்தோருக்கு $2,500 வரையில் உதவிநிதி, 65 வயதுக்கு மேற்பட்ட மூத்தோருக்கு $500 மாதாந்தரத் தொகை, குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு $300 உதவித் தொகை, உலகளாவிய மருத்துவ பராமரிப்பு, தேசிய சேவை செய்தோருக்கு இலவச பல்கலைக்கழகக் கல்வி, குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு $10 ஆக்குவது, வேலை அனுமதிக்கான சம்பள உச்சவரம்பை $5,00 ஆக அதிகரிப்பது போன்றவை கட்சியின் தேர்தல் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம், மேல்தட்டு மக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நியாயமான, சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க விழைவதாகக் கட்சி குறிப்பிட்டது. அங் மோ கியோ, ராடின் மாஸ், இயோ சூ காங் ஆகிய தொகுதிகளில் போட்டியிடப் போவதாக சீர்திருத்தக் கட்சி புதன் கிழமை கூறியது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online


