ஹாங்காங்குக்கு அமெரிக்கா வழங்கும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம், சீனாவுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
"சீனப் பெருநிலம் எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதுபோலவே இனி ஹாங்காங்கும் நடத்தப்படும்," என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் நேற்று (ஜூலை 14) தெரிவித்தார்.
பிரிட்டனின் முன்னாள் காலனியான ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் சீன பெருநிலத்திற்கு இல்லாத சில தனி சுதந்திரங்களை அனுபவித்து வந்தது.
'ஒரு நாடு, இரு அமைப்பு முறை' எனும் கொள்கையின்கீழ் ஹாங்காங்குக்கு சில சுயாட்சி அதிகாரங்களும் இருந்து வந்தன.
ஆனால் சீனா இயற்றியுள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம், 1984ஆம் ஆண்டு சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஹாங்காங்குக்கான சிறப்பு உரிமையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.
1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட பின்பு கொண்டுவரப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாக சீனா இயற்றியுள்ள இந்தப் பாதுகாப்புச் சட்டம் கருதப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பெய்ஜிங் பதிலடி தரப்போவதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. எனினும், சீன அரசாங்க ஊடகம் மூலம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, திரு டிரம்ப்பின் ஆணை பற்றி குறிப்பிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
"ஹாங்காங் விவகாரம், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களுக்கு உட்பட்டது. இதில் தலையிடுவதற்கு வேறு எந்தவொரு நாட்டிற்கும் உரிமை கிடையாது," என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியது.

