மலேசியாவில் சமூக ஊடகப் பயனீட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் படப்பிடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால் சட்டப்படி உரிமம் பெற வேண்டும் என்று அந்நாட்டின் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைஃபூதின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மலேசியாவில் ஆவணங்கள் இல்லாமல் உள்ள குடியேறிகள் பற்றி சர்ச்சைக்குரிய விளக்கப்படம் தயாரித்த அல் ஜசிரா ஒளிபரப்பு நிறுவனத்துக்கு எதிராக அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ள வேளையில் அமைச்சர் சைஃபூதினின் அறிக்கை வெளியாகியுள்ளது.
"முக்கிய ஊடகமாக இருந்தாலும் தனிப்பட்ட ஊடகமாக இருந்தாலும் எல்லாருக்கும் உரிமம் பெறும் விதிமுறை பொருந்தும். படப்பிடிப்பு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துகிறோம். ஆனால் தற்போதைய சட்டத்தையும் விதிமுறையையும் பொறுத்து அது அமைய வேண்டும்," என்று அமைச்சர் சைஃபூதீன் வலியுறுத்தினார்.

