கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் முகக்கவசம் அணிவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் முகக்கவசங்கள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
செலவு பற்றிய கவலை மற்றும் புதிய பொருட்கள் போதுமான அளவுக்கு வலுவானவையா என்பது போன்ற காரணங்களால் பிளாஸ்டிக்கிற்குப் பதில் மக்கும் பொருட்களைப் பயன்படுத்த நிறுவனங்கள் தயங்குகின்றன.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குள் மக்கிப் போகக்கூடிய வாழை நார் முகக்கவசம் பிலிப்பீன்சில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்சில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அபக்கா எனப்படும் நார் வகைகளில் செய்யப்படும் முகக்கவசங்களில் என்95 முகக்கவசங்களைவிட அதிக ‘வாட்டர் ரெஸிஸ்டன்ட்’ எனப்படும் நீர் எதிர்ப்புடையவையாக உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் சுற்றுச்சூழலில் உள்ள அபாயகரமான துகள்களை வடிகட்டக்கூடிய துளைகள் பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதையும் அது காட்டியது.
அபக்கா வகை நார் ஏற்கெனவே டீ பொட்டலங்கள், ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் முகக்கவசங்களின் விற்பனை இவ்வாண்டில் 200 மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டி ஐநா வர்த்தக கட்டுரை கூறுகிறது.