எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய குழுவினருக்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை, கடந்த ஜூலை மாதம் முதல் பரிசோதனை முறையில் சீனா வழங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை எந்த தடுப்பு மருந்தும் இறுதிக்கட்ட பரிசோதனை நிலையைக் கடந்து விடாத நிலையில், மருத்துவப் பணியாளார்கள், உணவுக்கடை, போக்குவரத்து மற்றும் சேவைத் துறைகளில் பணியாற்றுவோரின் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படுவதாக தேசிய சுகாதார ஆணைய அதிகாரியான ஸெங் ஸோங்வெய் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த அவசரகால பயன்பாட்டுத் திட்டத்தை, குளிர்காலத்தில் புதிய இடங்களில் கிருமித்தொற்று ஏற்படுவதைத் தடுக்கப் பயன்படுத்தும் நோக்கில் விரிவுபடுத்தலாம் என, நாட்டின் கொரோனா தொற்று தடுப்புமருந்து மேம்பாட்டுக்கான வளங்களை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைவரான திரு ஸெங் குறிப்பிட்டார்.
இந்த தடுப்பு மருந்தை அவசரகாலப் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான வழிகாட்டிக் குறிப்புகளுக்கு கடந்த ஜூன் 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பல நாடுகள் சீனாவின் இந்த தடுப்பு மருந்து திட்டத்தின் மீது ஐயம் கொண்டுள்ள நிலையில், பாப்புவா நியூ கினி, இத்தகைய தடுப்பு மருந்து போட்டுக்கொள்பவர்களைத் தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டது.
மருந்தகப் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாக அமைப்பு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குறைவான லாபத்தை ஈட்டும் விதத்தில் தடுப்பு மருந்துகளின் விலை இருக்கும் என்று திரு ஸெங் குறிப்பிட்டார்.


