பரிசோதனையில் இருக்கும் கொரோனா கிருமி தடுப்பு மருந்தை 400 யுவான் (S$80) விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது சீனா.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாசிங் நகரில் உள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு அது வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அந்தத் தடுப்பு மருந்து இன்னமும் பரிசோதனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“அவசரத் தேவையுள்ள” 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் சினோவேக் பயோடெக் தடுப்பு மருந்தை மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி போட்டுக்கொள்ளலாம். இந்த மருந்து சோதனை அடிப்படையில் மருத்துவப் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
அந்நகரில் எத்தனை பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என்பது பற்றி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அந்தத் தடுப்பு மருந்தில் 2 ‘டோஸ்’களை 28 நாட்கள் இடைவெளியில் இரு முறை போட்டுக்கொள்ள வேண்டுமாம்.
துறைமுகங்கள், மருத்துவமனைகள், அதிக அபாயமுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பணியாளர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பரிசோதனை முறையில் தடுப்பூசி வழங்கப்பட்டதாக முன்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சீனாவில் 11 தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் இருந்தாலும் நான்கு மட்டுமே மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு முன்னேறியுள்ளன. ஆயினும், சந்தையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு இன்னும் ஒரு மருந்துக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பந்தயத்தில் முந்திக்கொள்ள சீனா பிரயத்தனப்படுகிறது. கடுமையான பக்கவிளைவுகள் இல்லாத தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ள சீனா அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.