சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் சிலர் பல நாட்களாக தாயகம் திரும்ப முடியாமல் தவிப்பதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட விடுமுறையை எடுக்க அவர்களது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும் சில முதலாளிகள் அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் ஒர்க்ஸ் எனும் போக்குவரத்து மற்றும் கட்டமைப்புக் குழுவின் தலைவர் முகமது சொலிஹான் பத்ரி, "வேலை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தால் சில ஊழியர்கள் விடுப்பு எடுத்து மலேசியாவுக்குத் திரும்ப பயப்படுகின்றனர்," என்றும் சிங்கப்பூரில் மலேசிய ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பட்டியலிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
விடுப்பு எடுத்து மலேசியாவுக்கு வந்து குடும்பத்தைப் பார்க்க விரும்பும் மலேசியர்களுக்குத் தேவையான உதவிகளை குடிநுழைவுத் துறை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார் திரு சொலிஹான்.
சிங்கப்பூரிலும் ஜோகூரிலும் கொவிட்-19 பரவல் குறைந்திருப்பதைச் சுட்டிக் காட்டி, இரு நாடுகளுக்கிடையே தினமும் சென்று வருவதற்கு அனுமதித்து எல்லைகளைத் திறக்க இது தக்க தருணம் என்றார் திரு முகமது சொலிஹான்.
சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் நீண்ட நாட்களாக தாயகம் திரும்ப முடியாமல் தவிப்பதாக தாமும் கேள்விப்பட்டதாக மலேசிய - சிங்கப்பூர் ஊழியர்கள் பணிக்குழுவின் தலைவர் தயாளன் ஸ்ரீபாலன் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சிலரும் தற்போது ஜோகூர் பாருவில் இருப்பதாகவும் மலேசியாவில் நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளால் அவர்கள் வீடுகளுக்குச் செல்ல இயலாத நிலை இருப்பதாகவும் அதன் தொடர்பில் மத்திய அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை தினசரி பயணிகளுக்காக திறந்துவிடப்பட வேண்டும் என்று அவரும் குறிப்பிட்டார்.

