ஹாங்காங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான கொவிட்-19 அலை தாக்கக்கூடும் எனக் கூறியுள்ள ஹாங்காங்கின் தலைவர் கேரி லாம், தேவைப்பட்டாலொழிய வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்கள் கிருமிப் பரவலில் மிக முக்கியமானவை என்று திருவாட்டி லாம் குறிப்பிட்டுள்ளார்.
ஹாங்காங்கில் கிருமித்தொற்று பரவல் அசுரவேகமெடுத்துள்ள நிலையில், சிங்கப்பூர்-ஹாங்காங் இடையேயான ‘ஏர் பபல்’ பயண ஏற்பாடுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
‘ஏர் பபல்’ ஒப்பந்தப்படி, முதல் பயணம் கடந்த மாதம் 22ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஹாங்காங்கில் கிருமிப்பரவல் ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதத்தைவிட அதிகமாக இருந்ததால், இந்தப் பயண ஒப்பந்தம் பற்றி இம்மாதத் தொடக்கத்தில் முடிவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
அங்கு கிருமிப் பரவல் வெகுவாக அதிகரித்து வருவதையடுத்து, இந்த ஒப்பந்தம் பற்றி இம்மாத இறுதியில் பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே விமானச் சீட்டு வாங்கியவர்கள் விமானச் சேவை நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹாங்காங்கில் இதுவரை சுமார் 6,400 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக தினமும் 70க்கு மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அங்கு இதுவரை 109 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.