மாடெர்னா தனது தடுப்பூசி 94.1 விழுக்காடு ஆற்றல் வாய்ந்தது என்று கூறியுள்ளது.
ஆய்வின் முழு விவரங்களில் இது தெரிய வந்துள்ளதாகக் கூறிய அது, அமெரிக்காவின் அங்கீகாரத்துக்காக ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.
அதே சமயத்தில் ஐரோப்பாவின் ஒப்புதலைப் பெறவும் அது முழு வீச்சில் இறங்கியிருக்கிறது.
தடுப்பூசியை வயது, இனம், சமயம், வசிப்பிடம் வித்தியாசமின்றி பரிசோதிக்கப்பட்டதில் அதன் ஆற்றல் வேறுபடாமல் வலுவான நிலையில் இருந்தது. தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்படுவதிலிருந்து நூறு விழுக்காடு வரை தடுக்கும் ஆற்றல் தடுப்பூசிக்கு உள்ளது என்று மாடெர்னா சொன்னது.
“எங்களுடைய தடுப்பூசி மிகவும் சக்திவாய்ந்தது என்பதை நிரூபிக்கும் தரவுகளைத் தயாராக வைத்துள்ளோம்,” என்று மொடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி தல் ஸாக்ஸ் தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில் கூறினார்.
“கொள்ளை நோய் பாதிப்பிலிருந்து உலகை மாற்றியமைக்கும் முயற்சியில் எங்களுடைய பங்கும் இருக்க விரும்புகிறோம்,” என்றார் அவர். ஆய்வின் முடிவில் தடுப்பூசி 94.1% வலுவானது என்பது தெரிந்ததும் உணர்ச்சிவசப்பட்டதாக அவர் சொன்னார்.
ஃபைசரும் ஜெர்மனின் பயோடெக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள தடுப்பூசியும் 95 விழுக்காடு ஆற்றல் வாய்ந்தது என்று அறிவித்துள்ள நிலையில் மாடெர்னாவின் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய மருந்து முகவையிடமும் நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கப் போவதாகவும் மாடெர்னா கூறியுள்ளது.