தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பு மருந்துகளில் 80 விழுக்காட்டை ஏற்கெனவே பணக்கார நாடுகள் வாங்கிவிட்டதாக பிலிப்பீன்சின் கொவிட்-19 கொள்கை தலைமை செயற்பாட்டாளர் கார்லிடோ கால்வெஸ் ஜூனியர் கூறியுள்ளார். மருந்து நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி நாடுகள் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டார் அவர்.
தடுப்பு மருந்துப் பிரிவுக்கும் தலைமை வகிக்கும் அவர், பிலிப்பீன்ஸ் போன்ற வளர்ந்துவரும் நாடுகள் எஞ்சியுள்ள 18% தடுப்பு மருந்துக்காக போராடி வருவதாகத் தெரிவித்தார். ‘கோவாக்ஸ் அமைப்பு’ 2 விழுக்காட்டை எடுத்துக் கொண்டது என்றார் அவர்.
விரைவான, நியாயமான முறையில் கொவிட்-19 தடுப்பு மருந்துகள் அனைத்துலக அளவில் விநியோகிப்பதை உறுதி செய்யும் அமைப்பு ‘கோவாக்ஸ்’. அதில் பிலிப்பீன்ஸ் கடந்த ஜூலையில் இணைந்துகொண்டது.
2 மில்லியன் தடுப்பு மருந்து டோஸ்களைப் பெற ஆஸ்ட்ரா செனகா நிறுவனத்துடன் பிலிப்பீன்ஸ் கடந்த வாரம் ஒப்பந்தம் செய்துள்ளது.
சீனாவின் சினோவேக் பயோடெக், ரஷ்யாவின் கமேலியா ஆய்வுக் கழகம், அமெரிக்காவின் ஃபைசர் போன்ற நிறுவனங்களிடமிருந்தும் தடுப்பு மருந்தை வாங்குவதன் தொடர்பில் பிலிப்பீன்ஸ் காய் நகர்த்தி வருகிறது.