கோயில்களில் குடமுழுக்கின்போது தமிழிலும் பாடல்கள் இடம்பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு

1 mins read
207dc46a-5a3f-458c-9880-2cfd1f1f5e64
படம்: ஊடகம் -

கோயில்களில் குடமுழுக்கின்போது தமிழிலும் பாடல்கள் இடம்பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலின் குடமுழுக்கு இன்று நடைபெற்றது.

அந்த குடமுழுக்கு விழாவில் தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம் போன்றவை வாசிக்கப்பட வேண்டும் என உத்தரவிடக் கோரி கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "900 ஆண்டுகள் பழமையான கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலின் குடமுழுக்கு விழாவில் தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம் போன்றவை வாசிக்கப்பட வேண்டும் என கோவில் உதவி ஆணையரிடம் வலியுறுத்தினோம். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், "அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் குடமுழுக்கு விழா நடந்தாலும், தமிழிலும் தேவாரம், திருவாசகம் போன்றவை பாடப்பட வேண்டும்" என்று கூறி விரிவான உத்தரவுக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்