சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு உதவ சிறப்புப் பிரிவை அமைத்துள்ளது ஜோகூர் மாநில மலேசிய இந்தியர் காங்கிரஸ்

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு உதவ சிறப்புப் பிரிவை அமைத்துள்ளது ஜோகூர் மாநில மலேசிய இந்தியர் காங்கிரஸ்

2 mins read
616c2eaa-70d0-4243-8780-8cc8e7c2f8bf
மலேசியர்கள் சிலர் காணொளிகளை சமூக ஊடகங்களில் பரப்புவதன் மூலம் பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்று கருதுகின்றனர் என ஜோகூர் மாநில மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் ஆர். வித்யாநந்தன் (வலது) குறிப்பிட்டார். படம்: மலேசிய ஊடகம் -

சிங்கப்பூர் - மலேசியா இடையிலான எல்லை எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில், சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள ஜோகூர் மாநில மலேசிய இந்தியர் காங்கிரஸ் சிறப்புப் பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் ஏதாவது சிரமங்களை எதிர்கொண்டாலோ, இறுதிச்சடங்கு போன்ற அவசரத் தேவைகளுக்காக மலேசியாவுக்குத் திரும்ப வேண்டியவர்களுக்கு எச்சில்/சளி மாதிரி பரிசோதனை செய்வது, பரிசோதனை முடிவுகளைப் பெறுவது, தனிமைப்படுத்தலுக்கான தேவைகள், செலவுகள், எல்லை தொடர்பான வேறு பிரச்சினைகளைக் கையாளுவது போன்றவற்றின் தொடர்பில் அந்தப் பிரிவு உதவிகள் செய்யும் என மாநிலத்தின் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் ஆர். வித்யாநந்தன் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்த கலகட்டத்திலும் உதவிக்கரம் நீட்டி வந்த இந்த அமைப்பு தற்போது நேரடி தொலைபேசி அழைப்புகளுக்கும் வழிவகை செய்துள்ளது.

மலேசியர்கள் சிலர் காணொளிகளை சமூக ஊடகங்களில் பரப்புவதன் மூலம் பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்று கருதுகின்றனர் எனக் குறிப்பிட்ட திரு வித்யாநந்தன், முறையான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் வேலை இழந்த 740 மலேசிய இந்தியர்களுக்கு வேலை ஏற்பாடு செய்வதன் தொடர்பில் ஜோகூர் மாநில மலேசிய இந்தியர் காங்கிரஸ் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 14 முதல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மெய்நிகர் வேலைக் கண்காட்சி நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சிறப்புப் பிரிவுக்குத் தலைமை தாங்கும் எஸ் அருள்தாஸ், கடந்த மார்ச் மாதத்திலிருந்து சுமார் 100 பேரின் பிரச்சினைகளில் உதவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லுதல், தனிமைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளில் உதவி தேவைப்படுவோர் 013-711 1798 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்