கொவிட்-19 அபாயம் அதிகமுள்ள நாடுகளுக்குச் சென்று, வரும் விமானங்களில் செல்லும் விமானப் பணியாளர்கள் 'டயபர்' பயன்படுத்திக்கொள்ளுமாறும் கழிவறையைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் தொற்று பரவும் அபாயம் குறையும் எனவும் சீனாவின் விமானப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா கிருமி பரவலைத் தடுப்பதற்காக விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 38 பக்க வழிகாட்டிக் குறிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஒரு மில்லியனில் 500 பேருக்கு மேல் கிருமித்தொற்று உள்ள பகுதிகளுக்குச் செல்லும் விமானச் சேவைகளுக்கு இந்தப் பரிந்துரைகள் பொருந்தும் என சீனாவின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் இதனைத் தெரிவித்தது.
முழு பாதுகாப்பு சாதனத்தின் ஒரு பிரிவாக டயபர் ஆலோசனை இடம்பெற்றுள்ளது. விமானச் சிப்பந்திகளுக்காக பின்வரும் பரிந்துரைகளும் அதில் வழங்கப்பட்டுள்ளன:
- மருத்துவ பாதுகாப்பு கவசங்கள்; - ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஈரடுக்கு மருத்துவ ரப்பர் கையுறைக; - கண்ணாடிகள்; - ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தொப்பிகள்; - ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உடை; - ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஷூ கவர்கள்.
மேலும், விமானத்தில் சுத்தமான பகுதி, இடைப்பட்ட பகுதி, பயணிகள் அமரும் பகுதி, தனிமைப்படுத்தப்படும் பகுதி என விமானத்தில் இருக்கைகள் பிரிக்கப்பட வேண்டும் எனவும் அவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய திரைகளால் பிரிக்கப்பட வேண்டும் எனவும் அந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் உள்ளூர் விமானப் பயணங்கள், கொவிட்-19க்கு முந்தைய நிலையை எட்டியிருந்தாலும் பல நாடுகள் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.


