துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த இந்தியர் ஒருவர், தனது தாயின் இறுதிச் சடங்குக்குச் செல்ல முடியாத ஆத்திரத்தில் சக ஊழியரை 11 முறை கத்தியால் குத்தியதன் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை துபாய் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
தன்னை இந்தியாவுக்கு அனுப்பாத ஆத்திரத்தில், 38 வயதான அந்த ஆடவர் தம்முடன் பணியாற்றும் 25 வயது ஆடவரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
துபாயில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்த நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக 22 பேரை விமான நிலையத்துக்குச் செல்லத் தயாராகும்படி 25 வயதான ஊழியர் ஒருவர் சக ஊழியர்களிடம் கூறியிருக்கிறார்.
அப்போது இந்தியாவைச் சேர்ந்த 38 வயது தொழிலாளி, தனது தாயின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், தான் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்றும் அவரிடம் கூறி, தம்முடைய பெயரையும் பட்டியலில் சேர்க்கும்படி கோரினார். ஆனால், அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இதற்கு அடுத்த நாள், உடல்நலமின்றி இருந்த தாயார் இறந்துபோன செய்தியைக் கேள்விப்பட்ட ஆடவர், தம்முடைய பெயரை இந்தியாவுக்குச் செல்வோர் பட்டியலில் சேர்க்காதது குறித்து 25 வயது ஆடவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால், அது தம்முடைய முடிவு அல்ல எனவும் நிர்வாகத்தின் முடிவு என அந்த 25 வயது ஆடவர் கூறியதைக் கேட்ட 38 வயது ஊழியர், வேகமாக தனது அறைக்குச் சென்று, கத்தியுடன் திரும்பினார்.
ஆத்திரத்தில் அந்த 25 வயது ஊழியரின் மார்பு, வயிறு போன்ற பகுதிகளில் குத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின்போது, குத்திய நபர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் படுகாயமடைந்த 25 வயது ஊழியர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் 38 வயது ஊழியர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்படும்.