வேகமாகப் பரவும் தன்மையுள்ள கொரோனாவின் புதிய வடிவமான கிருமி பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இங்கிலாந்தில் இன்னும் அதிகமான பகுதிகளை முடக்க, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
அத்தியாவசியமற்ற கடைகள் தவிர மற்றவற்றை மூடுதல், பொழுதுபோக்கு வசதிகளை மூடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய நான்காம் கட்ட முடக்கநிலையை அறிவிப்பதன் தொடர்பில் ஆலோசனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் நான்காம் கட்ட முடக்கநிலை அறிவிக்கப்பட்ட லண்டன், தென்கிழக்கு இங்கிலாந்து ஆகியவற்றுக்கு வெளியே புதிய வடிவிலான கொவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அறிவியல் வல்லுநர்களும் அமைச்சர்களும் நேற்று சந்தித்து உரையாடினர்.
ஆனால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் முடக்கத்தை நடைமுறைப் படுத்தினால் அது திரு ஜான்சனுக்கு பெருத்த அடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிறிஸ்துமசை முன்னிட்டு சமூக இடைவெளி விதிகளைத் தளர்த்த அண்மையில் திட்டமிட்டதற்காக, தொற்றுப் பரவலை சரிவர கையாளவில்லை என்ற மக்களின் குற்றச்சாட்டை அவரது அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. தளர்வுகளைத் தொடர்ந்து பரவல் அதிகரித்த நிலையில், 16 மில்லியன் பிரிட்டன் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.