வியட்நாமிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 665 கிலோ கஞ்சா சிங்கப்பூரிலிருந்தோ அல்லது சிங்கப்பூர் வழியாகவோ வியட்நாமைச் சென்றடையவில்லை என சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று (டிசம்பர் 29) தெளிவுபடுத்தியது.
ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து கிளம்பிய அந்தக் கொள்கலன், மற்றொரு துறைமுகம் வழியாகக் கடந்து சென்று வியட்நாமின் ஹாய் போங் நகரை இம்மாதம் 11ஆம் தேதி அடைந்தது.
அந்த கஞ்சாவை சிங்கப்பூரிலிருந்த ஒருவர் ஹனோயின் டக்கான் வியட்நாம் டிரேடிங் ஸ்டாக் கம்பெனிக்கு அனுப்பியதாக வியட்நாமிய ஊடகமான VnExpress செய்தி வெளியிட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இந்த விளக்கத்தை அளித்தது.
விலங்குகளுக்கான உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் அந்தக் கொள்கலனுக்குள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அது வியட்நாமின் தொழிற்சாலை ஒன்றில் பிரித்துப் பார்க்கப்பட்டபோது உள்ளே கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


