சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிருமிப் பரவல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பகுதி முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் வாழும் 1.6 மில்லியன் மக்கள் நகரைவிட்டு வெளியேறக்கூடாது என சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது.
தற்போதைய நிலையில் பெய்ஜிங்கின் தெற்கு வட்டாரம் ஒன்றில் ஏழு பேருக்குகிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் சிறப்பு அனுமதி பெற்றாலன்றி அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாது.
அத்துடன், அவர்கள் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக கிருமிப் பரவல் சோதனை செய்து கொண்டு தொற்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
மேலும், அவ்வட்டார மக்களில் 50 பேருக்கு மேல் ஒன்றுகூட அனுமதியில்லை. அங்கு நடப்பதாக இருக்கும் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திப் போடப்பட்டுள்ளன. இறந்தவர்களை அடக்கம் செய்யும் நடைமுறையை சுருக்கமாக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டு விடுமுறை காலம் வரவுள்ள நிலையில், சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின் அதிக அளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது சீன அதிகாரிகளுக்கு கவலை அளித்துள்ளது.
இதனால், மற்றோர் கிருமிப் பரவல் ஏற்பட்டு நாடு பெரிய அளவிலான முடக்கநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
மற்றோர் நிலவரத்தில், சீனாவில் நேற்று 103 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் புதிய உச்சமாக சீனாவின் ஜிலின் மாநிலத்தில் 46 புதிய சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பெய்ஜிங்கை சுற்றியுள்ள ஹிபெய் மாநிலத்தில் இதுவே 19 புதிய கிருமித்தொற்று சம்பவங்களாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆளும் கட்சி உறுப்பினர்களும் அரசு தலைமைத்துவமும் நேற்று செவ்வாய்க்கிழமை கூடி இது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அதிகப்படியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, பொதுமக்கள் கூடுவதை குறைப்பது, பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது என முடிவு செய்யப்பட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.