பிரிட்டனில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 100,000ஐ கடந்துவிட்டது. இதன் காரணமாக மற்ற ஐரோப்பிய நாடுகள் அவற்றின் எல்லைகளைக் கட்டுப்படுத்தியுள்ளன.
உருமாறியுள்ள கொவிட்-19 கிருமி பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டனில் கொவிட்-19 காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்தார் அனுபவிக்கும் சோகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் தவறியதாக முதலில் பல கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து பிரிட்டிஷ் மக்கள் துன்புறுவதையும் உயிரிழப்புகளையும் முடிந்தவரைக் குறைத்துள்ளதாக திரு ஜான்சன் கூறினார்.
இந்நிலையில், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகளைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை முதல்முறையாக மேற்கொள்ள இருப்பதாக பிரட்டனின் அண்டை நாடான அயர்லாந்து தெரிவித்துள்ளது.
மூன்றாவது முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய அளவிலான முடக்கநிலை வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அது தெரிவித்தது.
எல்லைகளில் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி பரிசீலனை செய்து வருகிறது. ஜெர்மனிக்குள் விமானங்கள் வருவதற்குத் தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆராய்கிறது.