இந்திய துருப்புகளுடன் ஏற்பட்ட மோதலில் நான்கு வீரர்கள் மாண்டதை சீனா முதல் முறையாக இன்று (பிப்ரவரி 19) ஒப்புக்கொண்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த மோதலில் இருபது இந்திய ராணுவ வீரர்களும் இறந்தனர். இதனை இந்தியா வெளிப்படையாக அறிவித்திருந்த போதிலும் சீனா தனது தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தை பற்றி தெரிவிக்காமல் மௌனம் காத்தது.
இந்த நிலையில் கல்வான் பள்ளத் தாக்கில் பெயரிடப்படாத வெளிநாட்டு ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என்று சீனாவின் தற்காப்பு அமைச்சு கூறியது.
1962ல் எல்லைத் தகராறு காரணமாக போரில் ஈடுபட்ட இந்தியாவும் சீனாவும் தங்களுடைய எல்லைக்குள் எதிரிநாட்டு வீரர்கள் ஊடுருவுவதாக ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தியாவின் லடாக் நிலப்பகுதி, திபெத்துக்கு நேர் எதிரே அமைந்துள்ளது.
கடந்த ஜூன் 20ஆம் தேதி லடாக்கில் உள்ள கன்வால் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே திடீர் கைகலப்பு ஏற்பட்டது.
இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆணி, முள்கம்பிகள், கட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரு தரப்பினரும் மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலை சீனா உறுதி செய்தாலும் உயிர்ச்சேதம் குறித்து வாய் திறக்கவில்லை.
ஆனால் இன்று வெளியிட்ட அறிக்கையில் எல்லை மோதலில் உயிர்த்தியாகம் செய்த படைத்தளபதி சென் ஹோங்ஜுனுக்கும் இதர மூன்று வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக சீனாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
“ஜூன் மாதத்தில் நடந்த சண்டையில் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் எல்லையைக் கடந்து சென்று தற்காலிக கூடாரங்களை அமைக்க முயற்சி செய்தனர். நாங்கள் அவர்களை விரட்டியடித்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றோம்.
“வெளிநாட்டு வீரர்கள் தலையில் கைவைத்தபடி ஓட்டம் பிடித்தனர். இதில் வெளிநாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பல வீரர்கள் மாண்டனர்," என்றும் அது கூறியது.
இரு நாட்டு ராணுவமும் பதற்றத்தைத் தணிக்க பல சுற்று பேச்சுகள் நடத்தின.
ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களிலிருந்து சீன வீரர்கள் வெளியேறியுள்ளதை அண்மையில் வெளியிடப்பட்ட துணைக் கோளப் படங்களும் காட்டின.