மணிலா: பிலிப்பீன்சில் கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.
சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள், ராணுவத்தினர் ஆகியோருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும். சீனாவின் சினோவேக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பிலிப்பீன்ஸ் வரவழைத்துள்ளது. பல வாரங்களாக ஏற்பட்ட தாமதத்துக்குப் பிறகு கடந்த சனிக்கிழமையன்று 600,000க்கும் அதிகமான தடுப்பூசி மருந்து அளவு பிலிப்பீன்சை சென்றுசேர்ந்தது.
மற்ற நாட்டுத் தலைவர்களைப்போல அல்லாமல், பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே முதலாவதாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தமது வயது காரணமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு தடுப்பூசியைத் தமக்குப் போட மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த தடுப்பூசியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
பிலிப்பீன்சின் ஆகப்பெரிய பொது மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜெரார்டோ லெகாஸ்பி முதலாவது நபராக நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆகச் சிறந்த தடுப்பூசிக்காக நாம் காத்திருக்க வேண்டாம். அப்படி ஒன்றும் கிடையாது.
“பாதுகாப்பான, செயல்திறன்மிக்க தடுப்பூசியே ஆகச் சிறந்தது என்பேன். அதுவும் அது முன்கூட்டியே வந்துவிடும்,” என்று குறிப்பிட்டார்.
சினோவேக் நிறுவனத்தின் கொரோனாவேக் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு பிலிப்பீன்ஸ் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தது.
கிருமித்தொற்றை 65 விழுக்காடு வரை மட்டுமே தடுப்பதற்கான செயல்திறனை அந்தத் தடுப்பூசி கொண்டிருப்பதால், அது மூத்தோருக்குப் போட பரிந்துரைக்கப்படவில்லை.