துபாய்: ஈரானின் தென் மாவட்டமான புஷேரில் நேற்று 5.9 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த பேரிடர் ஏற்பட்ட பகுதிக்கு அருகே அணு மின்சக்தி நிலையம் ஒன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் நிலநடுக்கம் காரணமாக உயிருடற் சேதம் பற்றிய அறிவிப்பு உடனடியாக இடம்பெறவில்லை.
ரிக் என்ற நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அந்த நகரில் உள்ள மருத்துவமனைகளும் அருகில் உள்ள நகர்களில் செயல்படும் மருத்துவமனைகளும் விழிப்பூட்டப்பட்டன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு 50 மருத்துவ வாகனங்கள் அனுப்பப்பட்டதாக வட்டார அதிகாரி ஒருவர் அரசாங்கத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
கோனாவே என்ற நகரில் மின்சாரம், தொலைபேசி, இணையம் எல்லாம் செயலிழந்துவிட்டதாகவும் மக்கள் அச்சத்தில் வீதிக்கு வந்துவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. குறைந்தபட்சம் இரண்டு பேர் காயமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் சில கிராமங்களில் மண் சுவர்கள் இடிந்துவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

