கொழும்பு: பொருளியல் நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை, ஐஎம்எஃப் எனப்படும் அனைத்துலக பண நிதியத்தின் உதவியை நாடியது. அதனைத் தொடர்ந்து அந்த நிதியத்தின் அதிகாரி ஒருவர் கொழும்பு வந்து சேர்ந்ததாகவும் அவருடன் இலங்கை நிதி அமைச்சர் பேச்சு நடத்தியதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.
நிதியத்தின் ஆசிய பசிபிக் பிரிவு இயக்குநர் சாங்யோங் ரீ என்பவரும் இலங்கை நிதி அமைச்சர் பாசில் ராஜபக்சேவும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இலங்கை கருவூலச் செயலாளர் எஸ் ஆர் அடிகாவேவும் பங்கேற்றதாக அச்செய்தி தெரிவித்தது.
ஏற்கெனவே பொருளியல் தவிப்பில் இருக்கும் இலங்கைக்கு உக்ரேன்-ரஷ்ய போர் அதன் கடன் சுமையை அதிகரித்துவிட்டது.
உலகத்தின் கவனம் போர் மீது திரும்பி இருப்பதால் இந்தியா, சீனா போன்ற நட்பு நாடு
களின் உதவி கிடைப்பது இலங்கைக்குத் தாமதமாகி வருகிறது. இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாதம் $2.31 பில்லியனுக்குக் குறைந்துவிட்டது.
எரிபொருள், உணவுப் பொருள் மற்றும் மருந்துப் பொருள்களுக்கான இறக்குமதிக்கு இலங்கை அரசாங்கத்தால் பணம் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அடிக்கடி ஏற்படும் மின்தடையை மக்கள் சந்தித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசை எப்போதும் காணப்படுகிறது. தாராளப் புழக்கத்தை அரசாங்கம் அனுமதித்ததைத் தொடர்ந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு கடந்த வாரம் 30 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது. இதனால் விலைவாசி மேலும் மேலும் உயரும் நிலை உருவாகி உள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறியது.

