புருக்ளின்: நியூயார்க் நகரம், புரூக்ளின் சுரங்கவழி ரயில் ஒன்றில் புகைக்குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
ஃபிராங்க் ஜேம்ஸ், 62 (படம்), எனும் இந்த ஆடவர், சம்பவம் நிகழ்ந்த 30 மணி நேரத்திற்குப் பிறகு, சம்பவ இடத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில், லோவர் மேன்ஹட்டனில் பிடிபட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த இத்தாக்குதல் சம்பவத்தில் 23 பேர் காயமுற்றனர்.
நியூயார்க் நகரவாசியான ஜேம்ஸ், இதற்குமுன் ஒன்பது முறை நியூயார்க்கிலும் மும்முறை நியூஜெர்சியிலும் கைதுசெய்யப்பட்டவன் என்று காவல்துறைத் தகவல் தெரிவிக்கிறது.
பொதுப் போக்குவரத்தில் பயங்கரவாத நடவடிக்கையில் அல்லது வன்முறைச் செயலில் ஈடுபட்டதாக புரூக்ளின் நீதிமன்றத்தில் ஜேம்ஸ்மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால், அவனுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
அண்மைய தாக்குதல் தொடர்பில், முதன்முறையாக நேற்று அவன் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ரயிலுக்குள் ஜேம்ஸ் இரண்டு புகைக்குண்டுகளை வீசியதாகவும் அதன்பின் அவன் சக பயணிகளை நோக்கிச் சுட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பின்னர் அவனிடம் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, அதன் துப்பாக்கிக் குண்டுகள், அரிவாள், வெடிபொருள்கள், எரிபொருள்கலன் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
துப்பாக்கிச்சூட்டில் பத்துப் பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாகவும் அதே நேரத்தில் சீராகவும் உள்ளது என்றும் காவல்துறை தெரிவித்தது.
புகையால் சூழப்பட்ட ரயிலில் இருந்து அவசர அவசரமாக வெளியேற முயன்றபோது மேலும்
13 பேர் காயமுற்றனர்.

