பேங்காக்: காதல் மனைவியின் சடலத்தை 21 ஆண்டுகளுக்குப் பிறகு தகனம் செய்துள்ளார் 72 வயதான ஆடவர்.
தற்போது, மனைவியின் சாம்பலை வீட்டிலேயே வைத்து, அவரது பெயரில் அறப்பணி செய்துவருகிறார் சார்ன் ஜன்வாட்சாக்கல் (படம்).
மனைவி மீது இவர் வைத்திருக்கும் ஆழமான காதல் பலரது உள்ளங்களை நெகிழவைத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனைவியின் உடலை வீட்டிலேயே வைத்து அதனுடன் பேசியும் மனைவியின் சடலம் வைக்கப்பட்ட சவப்பெட்டி பக்கத்தில் தூங்கியும் வந்தார் சார்ன்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது இரண்டு மகன்களும் வீட்டைவிட்டு வெளியேறினர்.
தாம் மாண்ட பிறகு, மனைவிக்கு முறையான இறுதிச்சடங்கு நடக்குமா என்ற அச்சம் எழுந்த பிறகு, தாம் உயிருடன் இருக்கும்போதே மனைவிக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவெடுத்தார் சார்ன்.
மனைவியின் நல்லுடல் தகனச்சாலைக்கு எடுத்துசெல்லப்பட்டபோது, சார்ன் கதறி கதறி அழுதார்.
மனைவியின் சாம்பலை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி அதை வீட்டுக்கு எடுத்துச்சென்றார்.
தாய்லாந்து ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சுகாதார அமைச்சில் வேலைபார்த்துக்கொண்டிருந்த தமது மனைவியைச் சந்தித்ததாக சார்ன் நினைவுகூர்ந்தார். படம்: இணையம்

