கோலாலம்பூர்: தனது மக்களை மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதற்கான தடையை நீக்க இந்தோனீசியா ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் தெரிவித்தார்.
ஊழியர்களின் பிரச்சினை குறித்து இருநாடுகளுக்கும் இடையே தீர்வு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தோனீசிய ஊழியர்கள் மலேசியாவிற்குச் செல்லலாம்.
கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஊழியர்களுக்குப் பற்றாக்குறை நிலவும் மலேசியாவில், இந்தோனீசிய ஊழியர்களின் வருகை, குறிப்பாக தோட்டத்துறையில், உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இல்லப் பணியாளர்களாக செல்லும் தனது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டதால், மலேசியாவின் தோட்டத்துறை உள்ளிட்ட வேலைகளுக்குத் தனது ஊழியர்களை அனுப்புவதை இந்த மாதம் 13ஆம் தேதி இந்தோனீசியா நிறுத்தியது.
இந்தோனீசியப் பணியாளர்களை நியமனம் செய்ய ஒற்றை வழி முறையை சோதனை செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தனது ஊழியர்களை மீண்டும் அனுப்ப இந்தோனீசியா ஒப்புக்கொண்டதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இல்லப் பணியாளர்களை நியமனம் செய்ய மலேசியா, முன்பு இணைய ஆட்சேர்ப்பு நடைமுறையைப் பின்பற்றியது. ஆனால், ஆட்கடத்தல், கட்டாய உழைப்பு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அது வழிவகுத்ததாக குற்றம்சாட்டுகள் கூறப்பட்டதால், இந்தோனீசியா அந் நடைமுறையைப் பின்பற்றக்கூடாது என்கிறது.

