தென்சீனாவில் நடந்த ‘லாட்டரி’ குலுக்கலில் 220 மில்லியன் யுவான் (S$42.7 மில்லியன்) வென்ற ஆடவர் ஒருவர், அதுபற்றி தம் மனைவி, பிள்ளையிடம் தெரியப்படுத்தவில்லை.
இந்தச் செய்தியை அறிந்தால் அவர்கள் திமிராகவும் சோம்பேறியாகவும் மாறிவிடக்கூடும் என அந்த ஆடவர் பயந்தார்.
குவாங்ஸி ஸுவாங் பகுதியில் 80 யுவானுக்கு (US$11) 40 குலுக்கல் சீட்டுகளை லி எனும் அந்த ஆடவர் வாங்கியிருந்தார். அவர் வாங்கிய ஒவ்வொரு சீட்டிலும் அதே ஏழு எண்கள்தான் இருந்தன.
அந்த ஏழு எண்களும் வெற்றி எண்களாக அமைந்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு சீட்டிற்கும் 5.48 மில்லியன் யுவானை (S$1.06மி.) அவர் வென்றார்.
தூங்க முடியவில்லை
அக்டோபர் 21ஆம் தேதி அவர் குலுக்கலில் வென்றதை அடுத்து, இரவில் தம்மால் உறங்க முடியவில்லை என லி கூறினார்.
அடுத்த நாள் சனிக்கிழமை காலை நானிங் எனும் பகுதிக்கு ரயில் பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள ஹோட்டலில் தங்கி வாரயிறுதியைக் கழித்தார்.
அந்த இரு நாள்களும் தாம் ஹோட்டலில் தங்கியதாகவும் வெற்றிச் சீட்டுகளை இழந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் ஹோட்டல் அறையைவிட்டு தாம் வெளியேறவில்லை என்றும் லி சொன்னார்.
தாம் வென்ற தொகையில் 5 மில்லியன் யுவானை (S$968,000) அறக்கொடை அமைப்புக்கு லி நன்கொடை வழங்கினார்.
‘லாட்டரி’ குலுக்கல் வெற்றியை ரகசியமாக வைத்துக்கொண்ட அவர், “என் மனைவி, பிள்ளையிடம் இதை நான் தெரியப்படுத்தவில்லை. மற்றவர்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்று அவர் நினைக்கக்கூடும், கல்வியில் என் பிள்ளையின் கவனம் சிதறிவிடக்கூடும் என்றும் நான் அஞ்சினேன்,” என்றார்.
அறக்கொடை அமைப்புக்கு 5 மில்லியன் யுவான் நன்கொடை வழங்கியது, 43 மில்லியன் யுவான் (S$8.35மி.) வரி செலுத்தியது போக, லீ வீட்டிற்கு எடுத்துச்சென்ற எஞ்சிய தொகை 171 மில்லியன் யுவான் (S$33.2மி.).
திட்டம் எதுவும் இல்லை
தாம் வென்றுள்ள இவ்வளவு பெரிய பணத்தைக் கொண்டு என்ன செய்வது என்பதுபற்றி தாம் இன்னும் திட்டமிடவில்லை என்றார் லி.