பேங்காக்: தாய்லாந்தில் 40 வயது ஆடவர் ஒருவர் உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தபோது ஐந்து பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்ட ஆடவரின் பெயர் உதேன். அந்த கார் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு பேங்காக்கில் ரோம் கேலோ ரோடு அருகே சென்றபோது காவல்துறையினரைப் பார்த்து உதேன் கூச்சலிட்டார்.
அவருடைய சத்தத்தைக் கேட்ட காவல்துறையினர், அந்த காரைச் சோதனை செய்து அதிலிருந்த உதேனை மீட்டனர். கடத்தல்காரர்கள் ஐவரையும் காவல்துறை கைதுசெய்தது. அவர்கள் பயணம் செய்த இரண்டு கார்களையும் அவற்றிலிருந்த ஆறு துப்பாக்கிகளையும் 61 குண்டுகளையும் காவல்துறை பறிமுதல் செய்தது.
“நான் உணவகத்தில் இருந்தபோது இரண்டு பேர் துப்பாக்கி முனையில் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். அவர்களில் ஒருவரை மட்டும் எனக்குத் தெரியும். காருக்குள் இருந்த மற்ற நான்கு பேரையும் எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு அந்த ஐவருடனும் எந்தவொரு வாக்குவாதமோ சண்டையோ இல்லை,” என்று உதேன் காவல்துறையிடம் கூறினார்.
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததற்காக அந்த ஐவர்மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.