பெய்ஜிங்: வடமேற்கு சீனாவின் யின்சுவான் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏரிவாயுக் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்க ஊடகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
கடல்நாகப் படகு திருவிழாவை முன்னிட்டு, மூன்று நாள் விடுமுறைக்கு முதல் தினம் இந்த வெடிப்பு நிகழ்ந்தது.
வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் டசன் கணக்கான தீயணைப்பாளர்கள் வேலை செய்வதை அரசாங்க ஊடகமான சிசிடிவியின் காணொளிப் பதிவு காட்டியது.
உணவக உரிமையாளர், பங்குதாரர்கள், ஊழியர்கள் உட்பட ஒன்பது பேர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட சிசிடிவி, அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகச் சொன்னது.
மேலும் எழுவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் சிசிடிவி கூறியது.
இச்சம்பவத்தில் மேலும் இருவருக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. இருவருக்கு லேசான காயங்களும் இருவருக்கு கீறல்களும் ஏற்பட்டதாக சிங்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
உயிரிழந்தவர்களில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஓய்வுபெற்றவர்களும் அடங்குவர். புகையை சுவாசித்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் இறந்ததாக அரசாங்க ஆதரவு பெற்ற தி பேப்பர் ஊடகம் குறிப்பிட்டது.
காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மக்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதில் முக்கியத் தொழில்துறைகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் சீன அதிபர் ஸி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக சின்ஹுவா வியாழக்கிழமை தெரிவித்தது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறியுமாறும் சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்பேற்க வைக்கவும் அதிகாரிகளுக்கு திரு ஸி உத்தரவிட்டுள்ளதாக சின்ஹுவா கூறியது.
வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து 100 ஊழியர்களையும் 20 வாகனங்களையும் உள்ளூர் தீயணைப்பு, மீட்பு சேவை அனுப்பி வைத்துள்ளதாக அவசரகால மேலாண்மை அமைச்சு தெரிவித்தது.
சீனாவில் வெடிப்புச் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். சட்டவிரோத கட்டுமானப் பணிகள் காரணமாக, கட்டடம் தீப்பிடிக்கும்போது அங்கிருந்து மக்கள் தப்பியோட சிரமமாக இருக்கிறது.