வாஷிங்டன்: கொவிட்-19 பெருந்தொற்று சீனாவின் வூஹான் ஆய்வுக் கழகத்திலிருந்து கிளம்பியதற்கான நேரடி ஆதாரத்தை அமெரிக்க உளவு அமைப்புகள் கண்டறியவில்லை.
இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வந்த தகவல்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டபோது இது தெரியவந்தது.
எனினும், வூஹான் ஆய்வகத்திலிருந்து கிருமி பரவத் தொடங்கியதற்கான சாத்தியத்தை உளவு அமைப்புகள் இன்னும் மறுக்கவில்லை என்று தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட நான்கு பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், பெருந்தொற்று எப்படி தொடங்கியது என்பதையும் அவற்றால் கண்டறிய முடியவில்லை.
வூஹான் ஆய்வுக் கழகத்தில் கொரோனா கிருமி குறித்து விரிவான பணிகள் நடத்தப்பட்டபோதிலும், தொற்றுப் பரவல் தொடங்கியதற்கான ஆதாரத்தை உளவு அமைப்புகள் இன்னும் கண்டறியவில்லை.
2019 இறுதியில் வூஹானில் மனிதர்களுக்கு இடையே கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதாக செய்தி வெளியானதிலிருந்து இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று எப்படித் தொடங்கியது என்பது குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட வகைசெய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மார்ச் மாதம் கையெழுத்திட்டார்.


