தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் திங்கட்கிழமை திடீர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
அங்குள்ள ஒரு கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் அந்த இடத்தில் இருந்து கரும்புகை கிளம்பியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களில் இருவர், வெடிப்பு ஏற்பட்ட உணவகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள். இருவர் வழிப்போக்கர்கள் என்று என்எச்கே அறிக்கை தெரிவித்தது.
சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் பெரும்பாலோர் இளையர்கள்.
ஷிம்பாஷி மாவட்டத்தில் பிற்பகல் 3.15 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது குறித்து தகவல் வந்ததாக தோக்கியோ தீயணைப்புத் துறை தெரிவித்தது. இதனை அடுத்து, தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெடிப்பு ஏற்பட்ட கட்டடம் ஜேஆர் ஷிம்பாஷி நிலையத்திற்கு அருகே அமைந்துள்து.
கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து புகை வருவதையும் உடைந்த கண்ணாடி மற்றும் குப்பைகள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடப்பதையும் படங்களில் காண முடிந்தது.
தோக்கியோ பெருநகரக் காவல் துறை வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் யாராவது காயம் அடைந்தனரா என்பதை கண்டறிய காவல்துறை தீவிர சோதனைகளை நடத்தியது.


