ஸாக்ரெப்: பயணிகள் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குரோவேஷியாவில் நிகழ்ந்தது.
வெள்ளிக்கிழமையன்று குரோவேஷியாவின் ஸாடார் நகரிலிருந்து இங்கிலாந்துத் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ரயன்ஏர் விமானத்தில் ஒருவர் கதவைத் திறக்க முயன்றார். ஸாடார் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது அவர் இவ்வாறு செய்ய முயன்றிருக்கிறார்.
பெயர் தெரிவிக்கப்படாத அந்த ஆடவர் ஓர் 27 வயது பிரிட்டிஷ் நபர் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் கணொளிகளில் பதிவானது. காணொளிகளைப் பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
ஆடவர் வலுக்கட்டாயமாக விமானத்தின் கதவை நோக்கிச் சென்றது சில காணொளிகளில் பதிவானது. “கதவைத் திற, கதவைத் திற” என்று அவர் கத்தியதும் கேட்டது.
விமானத்தில் இருந்த மற்ற இரு பயணிகள் அவரை அடக்கியதும் காணொளிகளில் தெரிந்தது. குரோவேஷியக் காவல்துறையினர் அவரை விமானத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததன் தொடர்பில் ஆடவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் ஆடவரை விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் அதற்குப் பிறகு விமானம் திட்டமிட்டபடி லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் ரயன்ஏர் விமானத்துக்கான பேச்சாளர் பிரிட்டிஷ் ஊடகங்களிடம் கூறினார்.