பெய்ஜிங்: ஜப்பான் கடல்பகுதியில் ரஷ்ய கடற்படை, ஆகாயப்படையுடன் சேர சீனக் கடற்படை கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டன.
உத்திபூர்வ நீரிணையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி அமைவதாக சீனத் தற்காப்பு அமைச்சு கூறியது.
உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, பெய்ஜிங்கிற்கும் மாஸ்கோவுக்கும் மேம்பட்ட ராணுவ ஒத்துழைப்பைக் குறிக்கும் விதமாக இந்தப் பயிற்சி அமைகிறது.
ராணுவத் தொடர்பைத் தொடர அமெரிக்கா அறைகூவல் விடுத்துள்ளதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
கிழக்குத் துறைமுகமான சிங்டாவில் இருந்து புறப்பட்ட ஐந்து சீனப் போர்க்கப்பல்களும் நான்கு ஹெலிகாப்டர்களும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஓர் இடத்தில் ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடும் என்று சீனத் தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இந்தப் பயிற்சியில் ரஷ்ய கடற்படை, ஆகாயப்படை இரண்டும் பங்கெடுப்பது இதுவே முதன்முறை என்று ராணுவ கவனிப்பாளர்களைச் சுட்டி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
ஜூலையில் பெய்ஜிங்கில் ரஷ்ய கடற்படைத் தலைவரான அட்மிரல் நிகோலாய் யெவ்மெனோவை சீனத் தற்காப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் ராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மறுஉறுதிப்படுத்தினர்.